வழக்கு 1. நூலும் , பொதுமகளிரும் ஒன்றா ? :
32.அவையறிதல்
பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; - மற்றம்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள். 317
தெளிவுரை 1: ( நன்றி : இளவழகனார் /தமிழ் இணையக் கல்விக் கழகம்)
நெறிப்பட்டுக் கற்பவர்க்கெல்லாம் நூல் எளிய, கொடுப்பவரை மனத்துட் கொள்ளாமல் தாம் பெறுகின்ற விலைப் பொருளையே கருத்தாகக் கொள்ளும் பொது மகளிரின் தோள்கள் பலர்க்கும் எளியவாதல் போல ஒரு தொடர் புற்றுக் கற்பவரெல்லார்க்கும் நூல்களின் பொதுக்கருத்துக்கள் எளியனவாய் விளங்கும்; ஆனால்; மாந்தளிர் போன்ற மேனியையுடைய அவ்விலை மகளிரின் மனம் யார்க்கும் அறிதல் அருமையாதல் போல, நூலின் உட்பொருள்கள் எல்லார்க்கும் அறிதற் கரியனவாகும்.
தெளிவுரை 2: ( நன்றி : பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் தமிழ்க் களஞ்சியம். காம் )
பெறத்தக்க பொருள்களைப் பெற்றுக்கொள்கிற பொதுமகளிர் தோள்போல, ஒரு மேற்போக்கான நெறிப்படி கற்போர்க்கு எல்லாம் நூலின் பொதுப் பொருள் எளிதில் விளங்கும். ஆனால் தளிரை ஒத்த மேனியையுடைய அந்தப் பொதுமகளிரின் மனத்தைப் போன்று, நூலின் உள்ளே பொதிந்து கிடக்கும் நுண்பொருள் அறிதற்கு அரிதாம்.
கவி.பத்மதேவன் , ஞா. மாணிக்க வாசகன் அவர்களின் தெளிவுரைகளும் இதே கருத்தையே வலியுறுத்துகின்றன
இங்கே தோன்றும் சில கேள்விகள்:
1. பேரின்பத்துக்கு வழிகாட்டும் நூல்களை , சிற்றின்பத்துக்குள் வழிநடத்தும் பொதுமகளிருக்கு ஒப்புமைக் கொண்டது சரியாமோ ?
2. கற்றுத்தரும் நூலும் , கற்பில்லாப் பெண்ணும் ஒன்றாமோ ?
3. ’மாந்தளிர் மேனிகொண்டவள் பெண் - என்றுநம்பி மயங்கி விடாதே’ என்று (நாலடியார் .41 / இதற்கான விளக்கம் தொடர்ந்து வரும்)அறிவுரைக் கூறியவர்கள் , ’மாந்தளிர் மேனியாள்’ என்று பொதுமகளிரைப் பற்றிப் பாடி, தாம் சொன்னதைத் தாமே மீறும் தவறைச் செய்வாரோ ? அப்பெண்டிரின் மனம் நுண்மையானது என்றும் சொல்வாரோ ? நூலை ; பெண்ணுக்கு ஒப்பாகக் கூறி இருப்பார் என்பதையே ஏதிர்பார்க்க முடியாத பொழுது , பரத்தையருக்கு ஒப்பாக எப்படிக் கூறி இருப்பார் ????
குறிப்பு :
1.பாவில் பொதுமக்ளிரை நோக்கித் தள்ளும் பொருள்தரும் சொற்கள் இருக்கிறதே தவிர ., எங்கேயும் பொதுமகளிர் என்னும் நேரடிக் குறிப்பு இல்லை . நாலடியாரின் வார்த்தை விளையாட்டுளால் உரை ஆசிரியருக்கு ஏற்பட்ட மயக்கமே இந்த்த் தெளிவுரைக்குக் காரணம் எனக் கருதுகிறேன்
2. அதிகாரத்துக்கு ஒப்புமை இருப்பதாகத் தெரியவில்லை
எனது விளக்கப் பா :
பெறுவ(து) அணிவோரின் தோள்போன்றாம் நூல்;கற்(று)
அறியமுனைந் தால்,எளிதாய் வந்தடையும்; ஆற்றங்
கரைப்புதைமண் போல்,உள் இருப்ப(து)எல் லார்க்கும்
அறிதற்(கு) அரியதா கும்
என் விளக்கம் : கற்க நினைக்கும் அனைவருக்கும் மிக எளிதாய்
( விலைக்கோ, அன்பளிப்பாகவோ) கிடைத்துவிடும் நூல். ஆனால் , ஆற்றங்கரைப் புதைமணல் போல் , அதன் உள் பொதிந்திருக்கும் கருத்துக்கள், அதன் ஆழம், எளிதாய் எல்லோராலும் அறிந்து கொள்ள இயலாது.
அருஞ்சொற்பொருள் : ( நன்றி : சென்னைப் பல்கலைக் கழகஅகராதி )
மற்றம் =ஆற்றோரத்தில் சரிந்து தாழ்ந்துள்ள நிலம்
முறி =தளிர்.
புரை =இடம்; பூமி ;.
மேனி =உடம்பு ,வடிவம், நிறம்
உள்ளம் =மனம் ; உள்ளக்கருத்து ; சொற்றொடரின் கருத்து ; எண்ணம் ; ஞானம் ;
எது சரியான தெளிவுதரும் பொருளாய் இருக்குமென்று, பெரியோர்கள் கருத்துக் கூறக் காத்திருக்கிறேன் ..


